குருதிநீரா தண்ணீர்க்குத் தீர்வாய் ஆகும்
குடிப்பதற்கு இரத்தத்தைக் கொடுப்போ ருண்டோ
பெருமையுடன் பாரதத்தின் புதல்வ ரென்று
பேசுவது எல்லாமும் பொய்மை தானோ
தருவதுவும் பெறுவதுவும் இரத்த லன்று
தமிழர்தம் பண்டுதொட்ட உரிமை யாகும்
அருவருப்பாய் உள்ளதிங்கே நீருக் காக
அண்டைமக்கள் அன்புதனை புதைப்ப தெல்லாம் !
காற்றுதனை அணைகட்டித் தடுப்போம் என்றும்
கதிரவனைத் திரையிட்டு மறைப்போம் என்றும்
சாற்றுகின்ற மதியிழந்த மனிதர் போன்று
சாற்றுகின்றார் காவிரியைத் தாரோ மென்று
வேற்றுநாட்டு மக்களாஇத் தமிழ ரிங்கே
வேறுபாட்டை எதற்காகக் காட்டு கின்றார்
நேற்றுவரை திராவிடத்தின் இனமாய் சேர்ந்தே
நெஞ்சினிலே இணைந்தொன்றாய் இருந்தோ ரன்றோ !
நரபலிகள் வாகனங்கள் எரிய வைத்தல்
நம்தலையில் நாம்தீயை வைத்த லாகும்
அரசியலை வெறியுணர்வை ஒதுக்கி வைப்போம்
ஆராய்ந்து நீதியினை நிலைக்க வைப்போம்
அரசுமூன்றும் ஒன்றமர்ந்து மாநி லங்கள்
ஆறுகட்குப் பொதுதிட்டம் வகுக்க வைப்போம்
நிரந்தரமாய்த் தீர்வுகாண நதிகள் தம்மை
நீள்நாட்டு உடைமையென சட்டம் செய்வோம் !